இந்திய பாதுகாப்பு படை வீரர்களை ஹத யோகா பயிற்றுனர்களாக உருவாக்கும் வகையில், ஈஷாவில் பாதுகாப்பு படைகளுக்கான பாரம்பரிய ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்திய கடற்படையை சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்றனர். அவர்களுக்கு கடந்த 15 நாட்களாக ஹத யோகாவின் பிரிவுகளான உப யோகா, அங்கமர்தனா, சூர்ய க்ரியா ஆகியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சி பெற்ற வீரர்கள் இதனைத் தொடர்ந்து கடற்படை முகாம்களில் உள்ள சக வீரர்களுக்கும் இந்த ஹத யோகா பயிற்சிகளை வழங்கவுள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்ற இந்திய கடற்படை தளபதி வைபவ் கூறுகையில், இங்கு பாரம்பரிய ஹத யோகா பயிற்சிகளை செய்த பிறகு, யோகாவை வெறும் உடற்பயிற்சியாக கருதுவது தவறான புரிதல் என்பதை நான் உணர்ந்தேன். இந்த பயிற்சியின் மூலம் யோகா நம் உடல், மனம் மற்றும் ஆற்றலை எவ்வாறு பிரபஞ்ச சக்தியுடன் ஒத்திசைக்கிறது மற்றும் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை உயர்த்துகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம் என்றார்.
இந்த பயிற்சி இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.