கோவை: சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் - திடீரென தீ பற்றி எரிந்த பேருந்து - உயிர் தப்பிய 50 பேர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வருவதற்காக 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுடன் சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று வந்துள்ளது. அப்படி வந்த அந்த பேருந்து அதிகாலை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் தூரிப்பாலம் பகுதியில் வந்த போது பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் திடீரென தீ பற்றி உள்ளது. இதனை பேருந்திற்கு பின்னே வந்த வேறு ஒரு வாகனத்தில் வந்தவர்கள் பார்த்து சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் சுற்றுலா பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அவசர அவசரமாக இறக்கி விடபட்ட நிலையில் பேருந்து உள் பகுதியிலும்
தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. அப்படி பேருந்து முழுவதும் தீ பற்றிய நிலையில் உடனடியாக அது குறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள் பேருந்தின் பெரும்பாலான பகுதிகளில் தீயில் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நல் வாய்ப்பாக யாருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.