கத்திபாரா மேம்பாலத்தில் நவீன சிக்னல்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
சென்னை கிண்டியில் இருந்து ஆலந்தூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின்கீழ் வழியாக செல்ல வேண்டியுள்ளது. மேலும், அங்குள்ள சர்வீஸ் சாலை வழியே பூந்தமல்லி, கிண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லவேண்டிய பைக் மற்றும் இலகுரக வாகன ஓட்டிகளும் கடந்து செல்ல பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆலந்தூர் புதுத் தெருவில் இருந்து ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்பவர்களும் கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள பிரதான சாலையைப் பயன்படுத்துகின்றனர். அங்கு போக்குவரத்து சிக்னல் இல்லாததால், நாள்தோறும் அனைத்து வாகனங்களும் குறுக்கும் நெடுக்குமாக கடந்து செல்லும்போது, நெரிசலும் விபத்துகளும் அடிக்கடி நடந்து வருகின்றன. இங்கு ஒருசில நேரங்களில் போக்குவரத்து போலீசார் வெறுமனே நிற்கின்றனர். பல நேரங்களில் அதுவும் இருப்பதில்லை. இதனால் அங்கு நடைபெறும் வாகன விபத்துகளில் பலர் அடிபட்டு வருகின்றனர். எனவே, கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஆலந்தூர், புதுத் தெரு மற்றும் ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் புதிதாக நவீன போக்குவரத்து சிக்னல் அமைத்து தரவேண்டும் என்று அனைத்து வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனர்.