ஐபிஎஸ் அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை மீண்டும் தனது வாதங்களை முன்வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிகாலத்தில் சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் பெற்று அதை முறைகேடாகப் பயன்படுத்தி லாபம் சம்பாதித்ததாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர்சேட்டுக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த 2020-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜாபர்சேட் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கியஅமர்வு தீர்ப்பை தள்ளிவைத்த நிலையில், இந்த வழக்கில் சிலவிளக்கங்களைப் பெற வேண்டியுள்ளது எனக்கூறி மீண்டும் மறுவிசாரணைக்கு பட்டியலிட்டு இருந்தனர்.
அதன்படி இந்த வழக்கு மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போதுஅமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷிடம், இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் நடந்துள்ளது என எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளீர்கள் என்பது குறித்து மீண்டும் வாதங்களை முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப். 3-ம்தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.