தா. பேட்டை அடுத்த ஜடமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் திலகா (14). வாளசிராமணி அரசு மேல்நிலைபள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் திலகா வீட்டில் சரிவர வேலை செய்யாததால் அவரது சகோதரி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி திலகா வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி திலகா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து ராஜமாணிக்கம் தா. பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.