பெரம்பலூர்: தந்தையை கொடூரமாக தாக்கிய மகன் - வைரலாகும் வீடியோ

5797பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூர் காவல் நிலையம், கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவரிடம் அவரது மகன் சக்திவேல் என்கிற சந்தோஷ் என்பவர் சொத்தைப் பிரித்து கொடுக்குமாறு அவ்வப்போது தகராறு செய்து வந்துள்ளார். இருவரும் தனித்தனியாக வெவ்வேறு ஊர்களில் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த 16‌.02.2024ஆம் தேதி சக்திவேல் அவரது தந்தை குழந்தைவேலை சொத்துப் பிரச்சினை தொடர்பாக கடுமையாகத் தாக்கியுள்ளார். காயம்பட்ட குழந்தைவேல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நான்கு நாட்களில் வீடு திரும்பி உள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக குழந்தைவேல் தனது மகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை. எனவே அவர் தனது மகன் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உதவி ஆய்வாளரிடம் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் இரண்டு மாத காலம் தந்தை, மகனுக்கு இடையே எவ்வித பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். சொத்தையும் தனது மகனுக்கு கொடுக்க தந்தை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் 18.04.2024ஆம் தேதி மாரடைப்பு காரணமாக குழந்தைவேல் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் 16.2.2024 ஆம் தேதி தந்தை குழந்தைவேலை அவரது மகன் சக்திவேல் தாக்கிய சிசிடிவி கேமரா வீடியோ மாவட்ட காவல் துறையினருக்கு 25.4.24 அன்று கிடைத்துள்ளது. அதன் அடிப்பையில் காவல்துறையினர் உடனடியாக (25.4.24 ) மேற்படி சம்பவத்தில் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

மேலும் இறந்த குழந்தைவேலின் தந்தை அத்தியப்ப கவுண்டர் என்பவர் 24.04.2024ம் தேதி சக்திவேல் தன்னையும் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க வந்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 25.4.24 அன்று கொடுத்த புகாரின் பேரில் கைகளத்தூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்ட்டு, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்திய உதவி ஆய்வாளர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்தி