நாமக்கல் கபிலர்மலை தோட்டக்கலைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு ஆண்டில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 180 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைந்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் சொட்டு நீர் பாசனம் அமைக்க பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.