பாலம் திறப்பு விழா - அமைச்சர்கள் பங்கேற்பு!

60பார்த்தது
சித்தூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ. 35 கோடி மதிப்பீட்டில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தைத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (ஆக. 30) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ. வ. வேலு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய துரைமுருகன், " இந்தப் பாலம் நூறு ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கும். இந்த பாலத்தினால், என்னை பிடிக்காதவர்கள்கூட நூறு ஆண்டுகளுக்கும் என் பெயரைச் சொல்வார்கள். நான் என்னுடைய தொகுதியை கோயிலாக நினைத்து பணியாற்றி வருகிறேன். காட்பாடி தொகுதி தான் எனக்கு கோயில். என்னை வளர்த்தவர்கள் நீங்கள், என் உயிர் உள்ளவரை நான் உங்களுக்கு அடிமையாக இருந்து, சாகும் வரையில் நன்றியுள்ளவனாக இருப்பேன். என் உயிர் பிரியும்போது காட்பாடி என்று எனது தொகுதியின் பெயரை சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும்" என்று உருக்கமாக பேசினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ. வ. வேலு, "906 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள பாலங்களையும் விரைந்து உயர்மட்ட பாலங்களாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது" எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி