திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளான மாதனூர், சோமலாபுரம், சான்றோர்குப்பம், தேவலாபுரம், வடகரை, ஆலாங்குப்பம், வீராங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கொள்ளையர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் சில தினங்களாக பெய்த தொடர் மழையால் பாலாற்றில் ஒரு பகுதியாக வெள்ளம் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் வீராங்குப்பம் மற்றும் ஆலாங்குப்பம் பகுதியில் பாலாற்றில் மணல் கொள்ளையர்கள் தண்ணீரிலேயே மணல் கொள்ளையில் ஈடுபட்டு குவியல் குவியலாக மணலை சேர்த்து வைத்துள்ளனர். பட்டப் பகலில் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இரவு நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபடும் மணல் கொள்ளையர்களை உமராபாத் காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கண்டு கொள்ளவில்லை எனவும், பாலாற்றில் செல்லும் நீரில் மணல் எடுக்கும் பொழுது அங்கு அதிக அளவில் பள்ளம் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்கள் பள்ளத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய சூழலை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மணல் கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.