திருவண்ணாமலை மாவட்ட மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மகளிர் திட்ட இயக்குநர் சரண்யாதேவி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாவட்டத்தில் மகளிர் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வாழ்ந்து காட்டுவோம் இயக்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் இணை மானிய கடனுதவிகள், நுண் நிறுவன நிதி கடனுதவி, மகளிர் குழுக்கள் இணைந்து தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகள், தொழில் தொடங்குவதற்கு மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சிகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார். கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர், உதவித் திட்ட அலுவலர்கள், அனைத்து வட்டார இயக்க மேலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.