திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை 16-வது வார்டில் கூட்டுறவு நியாயவிலைக் கடையை எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
ஆரணி நகரம், சைதாப்பேட்டை பகுதியில் 16-வது வார்டில் உள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடை தொலைவாக இருப்பதாகவும், எனவே இரண்டாக பிரிக்க ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரனிடம் நகரமன்ற உறுப்பினர் நடராஜன் தலைமையில் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் 800 குடும்ப அட்டைகளை பிரித்து புதிய கூட்டுறவு நியாயவிலைக் கடையை வாடகை கட்டடத்தில் எம்எல்ஏ எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகி சேவூர் எஸ். ஆர். விஜயகுமார், ஆரணி நகர செயலாளர் ஏ. அசோக்குமார், அவைத் தலைவர் எஸ். ஜோதிலிங்கம், நகரமன்ற உறுப்பினர்கள் ஏ. நடராஜன், ஏ. ஜி. ஆர். மோகன், எஸ். கே. பாக்கியலட்சுமி வெங்கடேசன், கே. குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.