உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆசிரியர்கள் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் அதை பின்பற்றி சுற்றுச்சூழலை காப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை வழிகாட்டுதலின்படி நடப்பு ஆண்டில் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவ பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார். முன்னதாக இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பூங்கொத்துக்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பள்ளியில் இருந்து ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சாவித்திரி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி இனிப்புகளை வழங்கினார். நிறைவாக இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் சுஜினி நன்றி கூறினார்.