காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை காங்கேயம் பகுதியை சுற்றியுள்ள வெள்ளகோவில், ஊதியூர், நத்தக்காடையூர், முத்தூர் ஊர் மக்கள் பயன்பெறும் வகையில் தாலுக்கா மருத்துவமனையாக இருந்ததை தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டு தற்போது மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் காங்கேயம் பேருந்து நிலையத்தை சுற்றி சுமார் நான்கு இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் இருந்தாலும் தினசரி அளவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தங்களின் வாகனங்களை மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்துவதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் உடன் வரும் உறவினர்களுக்கும் இடையூராகவும், வாகனப் பாதுகாப்பும் இன்றி வளாகம் இருக்கின்றது.
தற்காலிக நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டதால் நேற்று முன்தினம் நோயாளியை பார்க்க வந்த படியாண்டி பாளையத்தை சேர்ந்த தாயம்மாள்(வயது 50) என்பவருடைய இருசக்கர வாகனம் காணாமல் போனது. இதனை அடுத்து தற்போது பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகம் மிகவும் பாதுகாப்பின்றி மாறி வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் உடனடியாக மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகன பாதுகாப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.