திருப்பூர் மாவட்டம் தாராபுரம், புதுக்கோட்டைமேட்டுத் தெருவில் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசி அம்மன், சமேத ஸ்ரீ மதுரைவீரன்சாமி, ஸ்ரீ கன்னிமார்கள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாகாத்தாள் சுவாமிகள் கோவில் உள்ளது.
இக்கோவிலின் 57-வது ஆண்டு சாட்டு வழிபாட்டுத் திருவிழா கடந்த 4-ம் தேதி முதல் தொடங்கி இன்று வரையில் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராஜவாய்க்காலில் இருந்து அம்மனை அழைத்து வருதல் நடைபெற்றது. தொடர்ந்து தாராபுரம் அமராவதி ஆற்றிலிருந்து அம்மனுக்கு அலகு மற்றும் சங்கிலி பூவோடு எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மதுரைவீரன் உருவாரம் எடுத்து வருதல், கெடா வெட்டுதல் மற்றும் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு அழைத்தலும் நடைபெற்றது.
பிறகு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அதனை தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.