சாத்தான்குளம் அருகே விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு அருகில் புதிதாக அமையவிருக்கும் கல்குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் நெடுங்குளம் கிராமம் வேலன் புதுக்குளம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எங்கள் கிராமம் சிறு குறு விவசாயிகளை உள்ளடக்கியது.
இங்கு 120 குடும்பங்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டு வசித்து வருகின்றனர். புதிதாக அமைக்கவிருக்கும் குவாரி ஊருக்கு மிக அருகில் 300 மீட்டருக்குள் அமைந்துள்ளது. குவாரி செயல்பட்டால் முழு கிராமமும் அழிந்து விடும் நிலைமை உருவாகும். இங்குள்ள நீர் ஆதாரங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும். கனிமவளங்களை எடுக்க வைக்கப்படும் வெடிகளால் ஏற்படும் அதிர்வு மற்றும் ஒலி மாசுபாட்டினால் இங்குள்ள மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும்.
கற்கள் விழுவதால் பயிர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படும். சிலிக்கான் கலந்த விஷவாயுவை நாங்கள் சுவாசிக்க நேரிடும். ஒரு கிராமமே அழிந்து போகும் சூழ்நிலை உருவாகிவிடும். எங்களின் நிலையை கருத்தில் கொண்டு குவாரிக்கு உரிமம் வழங்காமல், நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.