தஞ்சாவூரில் ரேஷன் கடையில் விநியோகிக்கப்பட்ட கோதுமையில் கல், தூசி அதிகளவில் இருந்ததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். கல், தூசி நீக்கப்பட்ட கோதுமையை வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். விவசாய விளைப் பொருட்களை இந்திய உணவுக் கழகம் அந்தந்த மாநிலங்களில் அரசு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து, தேவைப்படும் மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது.
இதன்படி, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு நெல்லும், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கோதுமையும் வாங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் ஒரு ரேஷன் கார்டுக்கு
இருப்புக்கு ஏற்றவாறு 2 கிலோ முதல் 5 கிலோ வரை விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், தஞ்சாவூர் அண்ணா நகர் ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்பட்ட கோதுமையில் அதிகளவில் கல், தூசி இருந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதனால், அவர்கள் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர். அதற்கு அவர், "அரசு வழங்குவதைத்தான் நான் உங்களுக்கு வழங்குகிறேன். தேவையில்லை எனில் வாங்க
வேண்டாம்" என கூறியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கூறியது:
ரேஷன் கடைகளில் கடந்த பல மாதங்களாகவே கல், தூசி நீக்கப்படாத கோதுமைதான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. 2 கிலோ கோதுமையில் 250 கிராம் வரை கல், தூசிகள் உள்ளன. எனவே, கருப்பு, கல் நீக்கப்பட்ட அரிசி வழங்குவதுபோல, கோதுமை மணிகளையும் கல், தூசி நீக்கி வழங்க வேண்டும்" என்றனர்.