தஞ்சாவூர் பூச்சந்தை பகுதியில் பழக்கடை வைத்துள்ளவர் ஹாஜாமொய்தீன் (64). ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழங்கள், நெல்லிக்காய் உள்ளிட்ட அனைத்து வகை பழங்களையும் வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது கடையை மக்கள் தோழர் பழக்கடை என்றும் புத்தக பழக்கடை என்றும் சொல்வார்கள். இதற்கு காரணம் உள்ளது. தன்னிடம் பழங்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் பயனுள்ள புத்தகங்களை யும், குங்குமச்சிமிழ், ஊது பத்தி ஸ்டாண்ட், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை தினமும் வழங்கி வருவது இவரது வாடிக்கை. இதை கடந்த 12 ஆண்டுகளாக
தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு பூச்சந்தையில் உள்ள கணேச வித்யாலயா உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் பயிலும் 120 மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு புத்தகங்களை ஹாஜாமொய்தீன் வழங்கினார். பள்ளி தலைமை யாசிரியை அல்லிராணி, ஆசிரியர்கள் புகழேந்தி, ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.