சேலத்தில் நாளை முதல் 30-ந்தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி

58பார்த்தது
சேலத்தில் நாளை முதல் 30-ந்தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 5-ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்த கூட்டத்தில் 149 குழுக்கள் மூலம் அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு பின் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: -
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமும் இணைந்து நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இதுதொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கோமாரி நோய் இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய் ஆகும். இக்கொடிய நோயை தடுக்கும் வகையில் கோமாரி நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம் மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி கூறினார்.

தொடர்புடைய செய்தி