சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்வராயன் மலைத் தொடர் பகுதியான கருமந்துறை பகுதிக்கு ஆத்தூர், வாழப்பாடி, சேலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தும்பல், பனைமடல், பாப்பநாயக்கன்பட்டி, ஈச்சங்காடு, கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆத்தூரில் இருந்து கருமந்துறை நோக்கி இயக்கி சென்ற பேருந்து திடீரென மேடான பகுதியில் மேல் நோக்கி செல்லாமல் சாலையில் நின்றது. தொடர்ந்து நீண்ட நேரம் ஆகியும் பேருந்து மேல் நோக்கி செல்லாமல் திணறியதால் பேருந்தில் பயணித்த பயணிகள் பேருந்தில் இருந்து கீழே இறங்கி பின்பக்கத்தில் இருந்து தள்ளினர்கள். அப்போது இளைஞர்கள் தள்ளு தள்ளு தள்ளு என்றும் ருக்குமணி வண்டி வருது வழிவிடு என்றும் காமெடியாக வண்டியை தள்ளும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. ஒரு சிலர் கீழ இறங்கி நீண்ட தூரம் நடந்து சென்றனர்.
மலைப்பகுதிக்கு செல்லும் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் சாலையில் நின்றதாக பொதுமக்கள் புலம்பியவாறு அங்கிருந்து சென்றனர்.