நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மின்சார சிக்கன வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நேற்று (டிசம்பர் 20) நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில், மின்சார சிக்கன வார விழா கடந்த 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இதில் நாமக்கல் மின் பகிர்மான வட்டம் திருச்செங்கோடு கோட்ட மின் பகிர்மானக் கழகத்தின் சார்பில் மின்சார சிக்கன வாரத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சட்டையம்புதூர் மின்வாரிய அலுவலகம் அருகில் தொடங்கிய பேரணியை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், மண்டல நகர அமைப்புத் திட்டக் குழு உறுப்பினர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி செயலாளர் ராயல் செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணிக்கு மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் தலைமை வகித்தார்.