மனிதநேய மக்கள் கட்சியின் மாபெரும் மக்கள் திரள் போராட்டம்

57பார்த்தது
கர்நாடக முஸ்லிம்களுக்கு 4 விழுக்காடு இடஒதுக்கீடு ரத்து!. ராகுல் காந்தியின் எம். பி. பதவி பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் போராட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு மற்றும் கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 4 விழுக்காடு இடஒதுக்கீடு ரத்து ஆகிய பாஜகவின் அராஜகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா எம். எல். ஏ. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் கிரைம் பிராஞ்ச் பகுதியில் நடைபெற்றது.

கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறையில் இருந்த முஸ்லிம்களுக்கான 4 விழுக்காடு இடஒதுக்கீட்டை கர்நாடக பாஜக அரசு ரத்து செய்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் முஸ்லிம்கள் பெற்றுவந்த உரிமைப் பறிக்கப்பட்டு சமூகத்திற்கும், ஒக்காலிகர் சமூகத்திற்கும் தலா 2 விழுக்காடு என்பதாக பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தை பொருளாதார ரீதியாக நலிவுற்ற உயர்சாதி ஏழைகள் (EWS) பிரிவில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். 1995 ஆண்டு நீதியரசர் சின்னப்ப ரெட்டி தலைமையிலான ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் முஸ்லிம்களுக்க வழங்கப்பட்ட 4 விழுக்காடு இடஒதுக்கீட்டை கர்நாடக பாஜசு அரசு பறித்திருப்பது மாபெரும் சமூக அநீதியாகும்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 102(1) கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியின் பதவி பறிப்பு என்பதும் ஒன்றிய பாஜக அரசின் திட்டமிட்ட நாடகமாகும்.

கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13ம் தேதி நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சை அவதூறு வழக்காக மாற்றி, குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அவதூறு வழக்கின் உச்சபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கினாலும், அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கி, அவர் தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் அவசர அவசரமாக அவரின் பதவியைப் பறித்தும், அவரின் வீட்டை காலி செய்வதற்கு உத்தரவிட்ட நடவடிக்கை என்பது எதிர்க்கட்சிகள் இல்லாத சர்வாதிகார ஆட்சி முறைக்கான முன்னோட்டம் என்கிற அடிப்படையில் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

பாஜகவின் இதுபோன்ற அராஜக நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது எம். எல். ஏ. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற குழு தலைவர் கே. ஆர். ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பேராசிரியர் அருணன், மதிமுகவின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பூமிநாதன் எம். எல். ஏ. மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வே. கனியமுதன், மக்கள் விடுதலை கட்சியின் க. க. முருகவேள் ராஜன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எம். எஸ். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

அதேபோல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் கே. முஹம்மது கௌஸ், துணைப் பொதுச் செயலாளர் ஐ. முஹம்மது பாதுஷா, தமுமுக துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ். மைதீன் சேட்கான், எஸ். சலீமுல்லாஹ்கான், மாநில அமைப்புச் செயலாளர் எம். காதர் மைதீன் ஆகியோர் முன்னிலையில் இப்பேராட்டம் நடைபெற்றது.

மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் ஷேக் இப்ராஹிம். மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் எம். ஏ. சீனி அஹமத் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, “பறிக்காதே பறிக்காதே. ஜனநாயக உரிமையைப் பறிக்காதே. நெறிக்காதே நெறிக்காதே. சமூகநீதியின் குரல்வளையை நெறிக்காதே. " என கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :