செறுகோல் ஊராட்சிக்கு உட்பட்ட கிழங்குவிளை என்ற பகுதியில் அமைந்திருக்கும் பொற்றை என்ற மலைப்பகுதி உள்ளது. இதன்
அருகாமையில் மக்கள் குடியிருக்கும் வீடுகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் குமரி மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்தும் கும்பல் இந்த குன்றை உடைக்கும் பணியை தொடங்கி முதல் கட்டமாக சாலை அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த குன்றின் 300 மீட்டருக்குள் குடியிருப்பு நிறைந்த பகுதி என்பதால் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மாவட்ட ஆட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு மனு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பெய்த கனமழையில் மலையில் மண் வெட்டி கடத்திய இடத்திலிருந்து மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் மற்றும் சேறு புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலுற்றனர். இதனால் அதிருப்தியடைந்த மக்கள் ஜெசிபி. இயந்திரம் மற்றும் டாரஸ் லாரிகளை சிறைபிடித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் இப்பகுதியில் மலையை உடைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்வதாக பொதுமக்கள் முன்பு நாம் தமிழர் கட்சியினரிடம் உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம், குமரி மாவட்ட தலைவர் சத்திய தாஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.