செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகம், சங்கு தீர்த்த குளம் உள்ளிட்ட பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக பேரூராட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜை பேரூராட்சி தலைவர் யுவராஜ் துரை வரவேற்றார். பின்னர் பேரூராட்சி பணிகள் குறித்து பேரூராட்சி தலைவரிடம் விவரங்களை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின் சங்கு தீர்த்த குளத்தை ஆய்வு மேற்க்கொண்டார். பின்னர் கோயில் செயல் அலுவலர் புவியரசிடம் உடனடியாக குளத்தை பாசி இல்லாமல் சீரமைத்து சுத்தப்படுத்தியும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். பேரூராட்சி தலைவர் யுவராஜ் மாவட்ட ஆட்சியரிடம் பொளர்ணமி மற்றும் திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள் அவ்வாறு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை ஏற்படும் சமயத்தில் கழிப்பறை வசதி வேண்டி கோயில் நிர்வாகத்திடம் இடம் வழங்க கோரி பலமுறை மனு கொடுத்தும், பேரூராட்சி தரப்பில் கோரிக்கை வைத்தும் கோவில் நிர்வாகம் இடம் வழங்க முன் வரவில்லையென தெரிவித்தார். இதையடுத்து கோயில் செயல் அலுவலரிடம் உடனடியாக கிரிவல பாதையில் கழிப்பறை கட்ட இடத்தினை தேர்வு செய்து துறை ரீதியாக அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டார்.