கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து திமுக அரசை விமர்சித்து ஆனந்த விகடன் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. அதில், அடுத்த வேளைச் சோற்றுக்கே அல்லாடும் சுமார் 60 தினக்கூலிகளின் குடும்பங்களை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் நிராதரவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்வது இது முதல்முறையல்ல. டாஸ்மாக் வருமானத்தில்தான் மக்கள் நலத்திட்டங்களே நடக்கின்றன என்பது பெருமை அல்ல. சிறுமை.
வருமானத்தை அள்ளித்தரும் மணல், கிரானைட் உள்ளிட்ட இயற்கை வளங்களை சொற்ப காசுகளுக்கு தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்தினாலே, பல லட்சம் கோடிகள் வருமானம் கொட்டும். டாஸ்மாக் வருமானத்தில் தள்ளாடும் இந்த அரசாங்கத்தின் ஈரல், கள்ளச்சாராய மரணங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாத அளவுக்கு அழுகிப் போயிருக்கிறது. நிச்சயமாக இது திராவிட மாடல் அரசுக்கு பெருமை சேர்க்காது.