பேரூர்: வெகு விமர்சையாக நடைபெற்ற பட்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம்

67பார்த்தது
கோவை மாவட்டம், பேரூரில் உள்ள மேலைச்சிதம்பரம் எனப்படும் பட்டீசுவரர் கோயிலில் இன்று (பிப். 10) கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகள்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம் மற்றும் கோயில் வளாகத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. மேலும், 49 வேதிகைகள், 60 குண்டங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. கடந்த 3-ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.

 தொடர்ந்து மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. தொடர்ந்து 7-ம் தேதி முதல் கால யாக பூஜை, 8-ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, 9-ம் தேதி நான்காம் மற்றும் 5-ம் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன. இன்று (பிப். 10) காலை 5.45 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடந்தது. காலை 9.50 மணிக்கு ராஜகோபுரம், அனைத்து விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 

கோபுர கலசம் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து காலை 10.05 மணிக்கு பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மன், நடராஜ பெருமான், தண்டபாணி ஆகிய மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி