கோவை, பீளமேடு எல்லைய்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கீதாமணி (54) என்பவர் தனது வீட்டில் தன்னுடைய நாய்க் குட்டியோடு வாசலில் நின்று கொண்டு இருந்த போது, இரு பெண்கள் இருசக்கர வாகனத்தில் வந்து அவரிடம் விலாசம் கேட்பது போன்று பேச்சுக் கொடுத்து உள்ளனர். திடீரென அவர்கள் கீதாமணியின் கழுத்தில் இருந்த 4½ சவரன் தங்கத் தாலியைப் பறித்துக் கொண்டு தப்ப முயன்றனர்.
அப்போது கீதாமணி கூச்சலிடவே, அவரது கணவர், மகன் மற்றும் அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து அந்த இரு பெண்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், கைதான பெண்கள் திருப்பூர் காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (37) மற்றும் சங்கோதிபாளையம் பகுதியைச் சேர்ந்த அபிராமி (36) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.