கோவை ரத்தினபுரி பி. எம். சாமி காலனியை சேர்ந்த நல்ல சிவம், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி ராதாமணி, விஸ்வநாதபுரத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வருகிறார். இவர்களது மகன் நதீன், தனியார் பொறியியல் கல்லூரியில் இ.இ.இ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று, நதீன் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. அவர் திடீரென்று வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டியூஷன் முடித்துவிட்டு ராதாமணி வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு நதீன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராகீம் பாதுஷா மற்றும் போலீசார் விரைந்து வந்து நதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு நேற்று அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் அவரது செல்போன் மற்றும் கணினியில் உள்ள தகவல்களை சேகரித்து தற்கொலைக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.