திண்டுகல்லை சேர்ந்தவர் லட்சுமணன் (62). இவர் கோவை பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் தங்கிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் லட்சுமணன் சின்ன மேட்டுப்பாளையம் என்டிசி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டு இருந்தார். பின்னர் மதியம் உணவருந்தி அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லட்சுமணன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.