போக்குவரத்து நெரிசல்: மாநகராட்சி அதிரடி
சென்னையில் அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வாக, 493 இடங்களில் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு, மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் நாளுக்குநாள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பகல் நேரம் போலவே இரவு நேரங்களிலும் அதிக இடங்களில் பணிகள் நடைபெறுவதால் மக்கள் எப்போதும் சாலையில் நடமாடுவதை பார்க்க முடிகிறது. இதேபோல் இரவு முழுவதும் பல உணவகங்கள் திறந்துள்ளதால் சில இடங்களில் இரவு நேரங்களில் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக தி. நகர், பாரிமுனை, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரங்களிலும் போக்குவரத்து எரிச்சல் ஏற்படுவதையும், சாலையோர கடைகள் முன்பு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உணவு அருந்தச் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதையும் பார்க்க முடிகிறது. வருங்காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகரிக்கும் என்ற காரணத்தினால் சென்னை மாநகராட்சி இதற்கு பல்வேறு வழிகளில் தீர்வு கண்டு வருகிறது. அதாவது விற்பனை மண்டலங்கள் மற்றும் விற்பனை செய்யக்கூடாத மண்டலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.