யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா? என பார்முலா 4 கார் பந்தயத்தை கடுமையாக விமர்சித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அறிக்கையில், மாநில அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருக்கும் தற்காலச்சூழலில், பல கோடிகளை கொட்டியிறைத்து, சென்னையின் மையப்பகுதியான தீவுத்திடல் பகுதியில் பார்முலா 4 வாகனப்பந்தயம் நடத்தி, மக்களை பெருஞ்சிரமத்திற்கு ஆளாக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தீர்க்கப்படாத எத்தனையோ சிக்கல்களும், அத்தியாவசிய பிரச்சினைகளும் வரிசைகட்டி நிற்கும்போது அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, வாகன பந்தயத்திற்கு அதீத முக்கியத்துவம் அளித்து, தேவையற்ற பொருட்செலவு செய்து, மக்கள் படும் அல்லல்களையும், பாடுகளையும் அலட்சியப்படுத்தும் திமுக அரசின் போக்கு மிக மோசமான நிர்வாக செயல்பாடாகும்.
நோயாளிகளின் உயிரை காக்கும் அவசர ஊர்திகூட சாலையில் செல்வதற்கு வழிவாய்ப்பற்று, போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டுவிடுகிறது. இத்தகைய நிலையில், மாநகரத்தின் மையப்பகுதியில் வாகனப்பந்தயத்தை நடத்துவதன் மூலம் மக்களைக் கொடுந்துன்பத்திற்கு ஆளாக்குவதைத் தவிர, வேறென்ன சாதித்துவிட முடியும்? என சீமான் சரமாரியாக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.