கிண்டி மருத்துவமனையில் 18 மாதங்களில் 5,020 அறுவை சிகிச்சைகள்

79பார்த்தது
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 18 மாதங்களில் 5,020 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்தாண்டு, சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இம்மருத்துவமனை தொடங்கப்பட்ட குறுகிய காலங்களில் (18 மாதங்கள்) 5,020 அறுவை சிகிச்சைகளும், 538 நரம்பியல் அறுவை சிகிச்சைகள், 1375 சிறுநீரக அறுவை சிகிச்சைகள், 512 பொது அறுவை சிகிச்சைகள், 1000-க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் மற்றும் 137 இருதய பைபாஸ் மற்றும் இதய வால்வு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 மாதத்தில் இருதயவியல் துறையில் 1,683 பேருக்கு ஆஞ்சியோகிராம், ஸ்டென்ட் மற்றும் பேஸ்மேக்கர் பொருத்தும் சிகிச்சைகள் நடைபெற்று சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த மருத்துவமனை குறுகிய காலத்தில் சிறப்புடன் செயல்படுவதற்கு காரணமாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி