அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, 38 வயது பெண், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 17 வயதுடைய என் மகள், தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
படித்துக்கொண்டே, அரும்பாக்கம் பகுதியில் உள்ள சிறிய துணிக்கடையில், மாலை 5: 00 முதல் 10: 00 மணி வரை, பகுதி நேர வேலைக்காக சேர்ந்தார்.
நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்த போது, துணிக்கடை உரிமையாளர் காமராஜ், 56, என்பவர், என் மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகாரில் கூறியுள்ளார்.
போலீசார் விசாரித்த போது, காமராஜ் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது தெரிந்தது. இதையடுத்து காமராஜ் மீது, 'போக்சோ' வழக்கு பதிந்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.