கொல்லங்கோடு: அம்மன் கோவிலில் தூக்கநேர்ச்சை துவக்கம்

கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில் பங்குனி மாதம் பரணி நட்சத்திரத்தில் தூக்கநேர்ச்சை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை இன்று அதிகாலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

குழந்தையில்லாத தம்பதிகள் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வேண்டியும், கிடைத்த குழந்தை மற்றும் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் பக்தர்கள் தூக்கநேர்சை நடத்துகிறார்கள். பச்சிளம் குழந்தைகளை நேர்ச்சைக்கு கொடுத்த பிறகு அந்தரத்தில் குழந்தைகளை தூக்ககாரர்கள் கையில் வைத்துக்கொண்டு கோவிலை வலம் வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

சுமார் 40 அடி உயரம் கொண்ட இரண்டு வில்கள் வண்டியில் பொருத்தப்பட்டு ஒவ்வொரு வில்லிலும் இரண்டு தூக்ககாரர்கள் என 4 பேர் இந்த வில்லுடன் பிணைக்கப்பட்டு அவர்களின் கைகளில் நேர்ச்சை குழந்தைகள் வைக்கப்பட்டு இந்த தேரை பக்தர்கள் சரண கோஷத்துடன் ஆலயத்தை ஒரு சுற்று சுற்றி வருவது தூக்கத் திருவிழாவாகும். இந்த ஆண்டு 1166 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறவுள்ளது.

300 முறை இந்த தூக்கவில்லில் குழந்தைகளுடன் மூலகோவிலை சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இன்று துவங்கிய தூக்கநேர்சை நாளை காலை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி