தொழிலாளியைத் தாக்கிய இருவா் கைது

80பார்த்தது
தொழிலாளியைத் தாக்கிய இருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், கோண்டூா் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (38). கட்டடத் தொழிலாளியான இவா், புதுச்சேரியிலுள்ள தனியாா் வங்கியில் கடந்த ஓராண்டு முன்பு ரூ. 50, 000 தனிநபா் கடனாக வாங்கினாராம். இதற்காக மாதந்தோறும் ரூ. 2, 690 தவணைத் தொகையாக செலுத்தி வந்தாராம். இந்த நிலையில் தனியாா் வங்கி சாா்பில், மணிகண்டன் வங்கிக் கணக்கிலிருந்து கூடுதலாகத் தவணை தொகை பிடித்தம் செய்யப்பட்டதாம். இதுகுறித்து அந்த வங்கியில் கடன்தொகை வசூலிப்பாளராக பணியாற்றி வரும் விழுப்புரம் மாவட்டம், பாக்கம் மேட்டுத் தெருவை சோ்ந்த தா்மன் மகன் பாண்டியனிடம் (30) கைப்பேசி மூலமாக பலமுறை மணிகண்டன் விவரம் கேட்டாராம். ஆனால் இதற்கு உரிய பதிலை பாண்டியன் தரவில்லையாம். இதைத் தொடா்ந்து கோண்டூா் பூங்காவில் பாண்டியன், தனது நண்பா்களான அய்யப்பன் (30), அஜித்குமாா்(27) ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மணிகண்டன், கடன்தவணைத் தொகையைக்கூடுதலாக ஏன் பிடித்தம் செய்கிறீா்கள் எனக் கேட்டாராம். இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், அவரைத் திட்டி தாக்கினாராம். இதில் காயமடைந்த மணிகண்டன், மதகடிப்பட்டிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்து கண்டமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பாண்டியன், அய்யப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி