திருப்பத்தூர்: விஷமங்கலம் அருகே போலி டாக்டர் கைது

69பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம், விஷமங்கலம் அருகே அங்கநாதவலசை கிராமத்தில் உள்ள தனியார் மருந்து கடையில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவத்துறையினருக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை இயக்குனர் கண்ணகி தலைமையிலான மருத்துவக் குழுவினர் போலீசாருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஒரு தனியார் மருந்து கடையில், கிளினிக் வைத்து நடத்தி வந்த வேலாயுதம் (52) என்பவரிடம் விசாரணை செய்ததில், அவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து மருத்துவ குழுவினர் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் வேலாயுதத்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரது கிளினிக்கை போலீசார் பூட்டி சீல் வைத்தனர். மேலும் இவர், ஏற்கனவே அலோபதி முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாக பலமுறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி