பகுதி நேர வேலை தருவதாகக்கூறி ரூ. 46 லட்சம் மோசடி!

53பார்த்தது
வேலூர், காட்பாடியை சேர்ந்த 49 வயதுடைய பட்டதாரிக்கு மர்மநபர்கள் டெலிகிராம் செயலி மூலம் ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அதில் லிங்கில் உள்ள செயலியில் சென்று சிறிய முதலீட்டில் சில பணிகளை முடித்துக் கொடுத்தால் அதிகப்படியான கமிஷன் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இவரும் சிறிய தொகையை முதலீடு செய்து பணிகளை முடித்துள்ளார். அதற்கு உரிய கமிஷன் தொகை வந்ததை அடுத்து தொடர்ந்து கடந்த மே மாதம் 5-ந் தேதி முதல் இந்த மாதம் 14-ந் தேதி வரை ரூ. 47 லட்சத்து 9 ஆயிரத்து 650 முதலீடு செய்ததுடன், அவர்கள் அளித்த பணிகளையும் முடித்துக் கொடுத்துள்ளார்.

பின்னர், அவருக்கு ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 301 தொகை மட்டும் கமிஷனாக அளிக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கில் காண்பித்த மீதமுள்ள ரூ. 45 லட்சத்து 97 ஆயிரத்து 349 தொகையை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. தொடர்ந்து அவர் மர்மநபர்களை தொடர்பு கொண்டு பணத்தை பெற முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள் மேலும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

தொடர்புடைய செய்தி