திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் ஆம்பூர் நோக்கி நடைபயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் மீது பின்னால் ஈரோடு, பெருந்துறையில் இருந்து சோப்பு பார்சல்கள் ஏற்றிக் கொண்டு வேலூரை நோக்கி வந்த சரக்கு வாகனம் (பிக்கப் வேன்) மோதி விபத்துக்குள்ளானதில் ஊத்தங்கரை கருவனூர் பகுதியை சேர்ந்த புஷ்பா என்ற பெண் பக்தர் படுகாயமடைந்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் உடன் சென்ற லட்சுமி உள்ளிட்ட இருவர் காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் பக்தர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் ஈரோடு, பெருந்துறை பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் ஈரோடு, தர்மபுரி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு நடை பயணமாக மேற்கொண்டு வரும் நிலையில் சாலையோரம் நடந்து செல்லும் பெண் பக்தர்கள் மீது விபத்துக்கள் ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுவதை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்