உதயநிதி சந்திப்பு இதற்காகத்தான் - உறுதிபடுத்திய விஜயகாந்த்

28578பார்த்தது
உதயநிதி சந்திப்பு இதற்காகத்தான் - உறுதிபடுத்திய விஜயகாந்த்
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாக களம் கண்டு அதிக வாக்குவித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிப்பெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 அன்றே தன் தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்களையும், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில், இன்று (மே 3) சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்குச் சென்று அவருக்குப் பூங்கொத்து கொடுத்து உதயநிதி வாழ்த்துகளைப் பெற்றார். மேலும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்தும் உதயநிதி விசாரித்தார். அப்போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். உதயநிதிக்கு எல்.கே.சுதீஷ் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதையடுத்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'திரைப்பட நடிகரும், சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக, சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆசி பெற்றார் ." என பதிவிட்டு சந்திப்பு படங்களையும் சேர்த்துள்ளார்.

இதை தொடர்ந்து உதயநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் , கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணிக்கட்சியின் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவுளளதாக கூறப்படுகிறது.

அதேபோல கூட்டணியில் இல்லாத சில தலைவர்களையும் அரசியல் நாகரிகம் கருத்து உதயநிதி சந்தித்து வாழ்த்து பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி