

திருச்சி: யார் அந்த தியாகி? திருச்சியில் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம்
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு சமீபத்தில் நடத்திய நிலையில் ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. மதுபான ஊழல் விவகாரத்தை அ.தி.மு.க ஐ.டி விங் கையில் எடுத்துள்ள நிலையில், 'யார் அந்த தியாகி?' என்ற ஹேஷ்டேக்குடன் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் தில்லை நகரில் உள்ள கழக அலுவலகத்தில் 'யார் அந்த தியாகி?' ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் R. வெங்கட்பிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள்: அன்பழகன், ராஜேந்திரன் ரோஜர், நாகநாதர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் P. ரஜினிகாந்த், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கருமண்டபம் B. சுரேந்தர் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.