பொன்னர் - சங்கர் கோயில் திருவிழா கோலாகலமாக ஆரம்பம்

1068பார்த்தது
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வளநாட்டில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் - சங்கர் கோயில்கள் அமைந்துள்ளன. கொங்கு நாட்டு மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வரும், இக்கோயில்களில் பொன்னர் - சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் உள்ளன. இந்த கோயில்களில் மாசிப் பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். இதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 9ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தங்கைக்கு அண்ணன் கிளி பிடித்து கொடுக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. அதன்படி, பொன்னர் - சங்கரின் தங்கையான தங்காள், தாம் விளையாட கிளி வேண்டும் என அண்ணன்களிடம் கேட்டதால், தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொன்னர் - சங்கர் கோயில் அருகே உள்ள மரத்தின் மீதேறி, தங்காளுக்கு கிளி பிடித்து கொடுக்கும் வரலாற்றை நினைவு படுத்தும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. இதில் அண்ணன்மார் என்றழைக்கப்படும் சங்கர் வேடமிட்டவர் மரத்தின் மீதேறி தங்காளாக வரும் சிறுமிக்கு கிளியை பிடித்துக் கொடுத்தார். இந்த ஐதீக நிகழ்வை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமிகளை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி