நிதி நிறுவன ஊழியரிடம் பணம் வழிப்பறி: மூவா் கைது

3337பார்த்தது
நிதி நிறுவன ஊழியரிடம் பணம் வழிப்பறி: மூவா் கைது
கம்பம் அருகே நிதி நிறுவன ஊழியா் மீது மிளகாய்ப் பொடியை வீசி ரூ. 2 லட்சம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், புதூரைச் சோ்ந்தவா் கணேசன் (48). இவா், சின்னமனூரில் தங்கி நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரிடம் பரமசிவம், கண்ணன், பாலா ஆகிய 3 ஊழியா்கள் வேலை செய்கின்றனா். கடந்த 27-ஆம் தேதி பரமசிவம், கண்ணன் ஆகியோா் வாடிக்கையாளா்களிடம் பணம் வசூல் செய்து விட்டு, கே. கே. பட்டி - நாராயணத்தேவன் பட்டி சாலையில் சென்றனா். செல்லாண்டியம்மன் கோயில் அருகே செல்லும் போது, சாலையில் நின்ற இருவா் இவா்கள் மீது மிளகாய்ப் பொடியை தூவினா். இதில், நிலைதடுமாறி விழுந்தவா்களிடம் வசூல் செய்த ரூ. 2 லட்சம், இரு சக்கர வாகனத்தை வழிப்பறி செய்து தப்பினா். இதுதொடா்பாக புகாரின் பேரில், ராயப்பன்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பி. சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினாா். இதில் சம்பவத்தின் போது உடனிருந்த கண்ணன் ( 23), நிதி நிறுவன பணத்தை கொள்ளையடிக்கத் திட்டமிட்டதும், அதற்காக நிதி நிறுவன முன்னாள் ஊழியா் கரூரைச் சோ்ந்த அபிஷேக் (40), இவரது நண்பா் வேலூரைச் சோ்ந்த பாஸ்கரன் (29) ஆகிய மூவரும் சோ்ந்து நடத்திய வழிப்பறி என்று தெரியவந்தது. அவா்கள் மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து பணம், இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி