அரசமரம் அடிப்பகுதியில் சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு

1064பார்த்தது
அரசமரம் அடிப்பகுதியில் சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை வட்டம், அருந்தவபுரம் பகுதி குளக்கரையில் பெரிய அளவிலான அரச மரத்தின் வேர் அடிப்பகுதியில் 3. 75 அடி அளவிலான பெரிய ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம் இருந்தது.  
இந்த சிவலிங்கம் பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் என மூன்று பாகங்களையும், பிற்கால சோழர்கள் காலப் பாணியில் ஆவுடையில் நான்கு வர்க்கம் வைத்தும், லிங்க பானத்தின் தலைப் பகுதி அரைக் கோள வடிவில் இருந்தது.  லிங்க பானத்தின் தலைப்பகுதியான ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திர குறியீட்டுடன் இருந்தது.
இதனை கண்டறிந்த கோவையை சேர்ந்த அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்கள், அரசமரத்துக்குள் சிக்கியிருந்த சிவலிங்கத்தை மீட்டு, மேற்கூரை ஒன்றை அமைத்து வழிபாட்டிற்கு ஏற்ப பீடங்கள், புதிதாக நந்தியம் பெருமான் வழங்கி ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து அரன் பணி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர் கூறியதாவது:
கல்லூரி  மாணவர் ஒருவர் அளித்த தகவலின் பேரில், சிவலிங்கம் சிக்கியுள்ள தகவல் கிடைத்தது. ஊருக்கு நேரில் வந்து ஆய்வு செய்த போது, அப்பகுதியில் பெரிய சிவாலயம் சிதைந்து, சிவலிங்கம் மட்டும் அரச மரத்தின் அடியில் சிக்கி இருக்கலாம் என்பதை உறுதி செய்தோம். இந்த சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலம் என ஆய்வாளர்கள் மூலம் தெரிய வந்தது. அப்பகுதியில் விரைவில் கோவில் கட்ட உள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி