காரைக்குடி: மது போதையில் கள்ளக்காதலி கொலை

84பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக ஆண், பெண் ஆகிய இருவர் தெருக்களில் சுற்றித்திரிந்துள்ளனர். அவர்கள் காலி மது பாட்டில்கள், பழைய சாமான்களை சேகரித்து அவற்றை விற்று வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணும், மோகன் என்பவரும் குடும்பத்தைப் பிரிந்து திருமணம் செய்யாமல் சாலை ஓரங்களில் வாழ்ந்து வந்தனர்.

இரவு நேரங்களில் இவர்கள் இருவரும் மது அருந்திவிட்டு அடிக்கடி சண்டையிட்டும் வந்துள்ளனர். மேலும் இருவரும் இரவில் சாலையோரங்களில் உள்ள இடங்களில் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் இருவரும் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மது குடித்துள்ளனர். மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த மோகன் அருகில் இருந்த கல்லை எடுத்து அமுதாவின் தலையில் போட்டு கொலை செய்து விட்டு தப்பி தலைமறைவானார்.

இச்சம்பவம் குறித்து பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அமுதாவுடன் இருந்த புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பஞ்சாயத்து சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் ஏன் அமுதாவை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி