உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ. 7 லட்சம் பறிமுதல்

60பார்த்தது
உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ. 7 லட்சம் பறிமுதல்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை கொடுப்பதை தடுப்பதற்காக சேலத்தில் பல்வேறு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் அருகே பனமரத்துப்பட்டி பிரிவு ரோட்டில் பறக்கும் படை அதிகாரியும், வணிகவரி அலுவலருமான சுரேஷ் தலைமையில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் ரூ. 7 லட்சத்து 7 ஆயிரத்து 620 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கார் டிரைவரிடம் அதிகாரிகள் விசாரித்த போது, அவர் தர்மபுரி மாவட்டம் திருமானூர் பகுதியை சேர்ந்த ரவி (வயது 30) என்பது தெரியவந்தது.
தனியார் ஜல்லி கிரஷர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் அவர், நிறுவனத்தில் இருந்து வங்கிக்கு பணம் எடுத்து சென்றுள்ளார். மேலும் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தெற்கு தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் முருகனிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி