சேலம்: பேருந்தின் அடியில் சிக்கி நசுங்கிய கால்கள் - வீடியோ

12421பார்த்தது
சேலம் குகை எஸ்.எம்.சி காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சூரமங்கலம் பகுதியில் நடைபெறும் தனது உறவினர் திருமணத்திற்காக இருசக்கர வாகனத்தில் சுப்பிரமணியன், அவரது மனைவி கமலா மற்றும் அவரது உறவினர் மகள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கலெக்டர் அலுவலகம் வழியாக பெரியார் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர்‌. அப்போது எதிர்பாராவிதமாக பின்னால் வந்த கார் சுப்பிரமணியனின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் அதில் பயணித்த மூவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது எதிரே வந்த கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்கியது. இதில் இரு சக்கர வாகனம் பேருந்தின் அடிப்பகுதியில் சுப்பிரமணியுடன் சேர்ந்து சிக்கிக் கொண்டது. அவரது மனைவி மற்றும் உறவினர் மகள் இருவரும் எதிர் திசையில் விழுந்ததால் லேசான காயத்துடன் தப்பினர். பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்ட சுப்பிரமணியின் கால்கள் நசுங்கிய நிலையில் இருந்தவரை பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நிலவியது.

தொடர்புடைய செய்தி