தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் பதவி உயர்வு வழங்கக்கோரி சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டம் சார்பில் சேலம் கோட்டை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயகலா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சந்திரா, மாநில இணை செயலாளர் வனஜா, துணைத்தலைவர் கோகிலா உள்பட மாவட்டம் முழுவதிலும் சுகாதார மையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் ஒப்படைத்து கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் தாய்சேய் நலப்பணி தடுப்பூசி மற்றும் குடும்ப நலப்பணிகளை நடைபெற உரிய உத்தரவு வழங்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு முரணாக அரசு ஆணைக்கு எதிராக இதர பணிகளில் குறிப்பாக கணினி பணிக்கு உட்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பதவி உயர்வை முறைப்படுத்தி துறையில் ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல் பெண் சுகாதார ஆய்வாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்கி ஆண், பெண் பாலின பாகுபாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.