ராசிபுரத்தில், மாநில அளவிலான மனிதநேய வார விழா நிறைவையொட்டி, ரூ. 2.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மா. மதிவேந்தன் வழங்கினார். தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான மனிதநேய வார விழா-2025 நிறைவு நாள் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. உமா தலைமை வகித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர்கள் வி.எஸ். மாதேஸ்வரன் (நாமக்கல்), கே.இ. பிரகாஷ் (ஈரோடு), சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெ. ராமலிங்கம் (நாமக்கல்), கே. பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் பங்கேற்று 389 பயனாளிகளுக்கு ரூ. 2.45 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.