கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள சேலக்கரையில் வசித்துவரும் சுலைமான் என்பவரின் மனைவி குடும்ப தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) புது ஆடை, பலகாரம் என வாங்கிக்கொண்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க மாமியார் வீட்டிற்கு சுலைமான் வந்துள்ளார். அப்போது நடந்த தகாரில் சுலைமானை அவரது மாமியார் மற்றும் மாமனார் மொய்து ஆகியோர் இணைந்து கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சுலைமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மாமியாரை தாக்கியதாக சுலைமான் மீதும், மருமகனை தாக்கியதாக மொய்து, மாமியார் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.