கருங்கல் அருகே உள்ள ஐரேனிபுரம், மேலப்பெருவிளை பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன், தொழிலாளி. இவருடைய மனைவி மரிய விஜயகுமாரி (31). இவர் வேங்கோடு பகுதியில் உள்ள ஒருதனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சிலம்பரசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், மது குடித்து விட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மரிய விஜயகுமாரி மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வந்த சிலம்பரசன் அறை கதவை உடைத்து பார்த்தபோது அங்கு மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு, கருங்கல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் மரிய விஜயகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.