உயர்கோபுர விளக்குகளை சீரமைக்க உத்தரவு

53பார்த்தது
உயர்கோபுர விளக்குகளை சீரமைக்க உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்துார் -- அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்துார் வரை, தேசிய நெடுஞ்சாலையில், 89க்கும் மேற்பட்ட உயர்கோபுர மின்விளக்குகள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன.

இந்த விளக்குகளை முறையாக பராமரிக்காததால், செங்கல்பட்டு புறவழிச்சாலை, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் விளக்குகள் எரியாமல் உள்ளன.

இதனால், வழிப்பறி, சாலை விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இது தொடர்பாக, காவல்துறை அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சட்டம் - ஒழுங்கு ஆய்வு கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடந்தபோது, உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை என, காவல்துறையினர் குற்றம்சாட்டினர்.

அப்போது, உயர்கோபுர மின்விளக்குள் பராமரித்து சீரமைக்க, ஆறுமாதங்கள் ஆகும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தெரிவித்தார்.

அதன்பின், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைத்து, இரண்டு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி